திருமந்திரம் - பாடல் #1075
திருமந்திரம் - பாடல் #1075: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
பன்னிரண் டாங்கலை யாதி வயிரவி
தன்னி லகாரமு மாயையுங் கற்பித்துப்
பன்னிரண் டாதியோ டந்தம் பதினாலுஞ்
சொன்னிலை சோடச மந்தமென் றோதிடே.
விளக்கம்:
பன்னிரண்டு
கலைகளாக ஆதியிலிருந்தே இருக்கின்ற வயிரவியானவள் தனக்குள் அகாரக் கலையையும்
(படைத்தல்) மாயைக் கலையையும் (மறைத்தல்) சேர்த்து பதினான்கு கலைகளாகவும்
அதனோடு ஆதியும் அந்தமும் சேரும் போது பதினாறு கலைகளாக முடியும். இந்த
பதினாறு கலைகளை சொல்கின்ற நிலையில் அவை பதினாறு எழுத்துக்கள் கொண்ட
மந்திரமாக இருக்கின்றது. வயிரவியாக இருக்கும் இந்த மந்திரத்தை ஓதுங்கள்.
கருத்து:
வயிரவியானவள் பன்னிரண்டு விதமான சூட்சுமமான செயல்களை செய்கின்றாள். அவள்
இயக்கம் பெற்று உலக செயல்களுக்காக படைத்தல் மற்றும் மறைத்தலுக்கான
காரியத்தை செய்யும் போது பதினான்கு செயல்களை செய்கின்றாள். இந்த செயல்களை
எடுத்து ஒலிவடிவமாக சொல்லும் போதும் ஒளிவடிவமாக எழுதும் போதும் அவை பதினாறு
எழுத்துக்கள் கொண்ட மந்திரமாக இருக்கின்றது. இந்த மந்திரத்தை ஓதுங்கள்.
Comments
Post a Comment