திருமந்திரம் - பாடல் #1085
திருமந்திரம் - பாடல் #1085: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசக்தி
அண்டமோ டெண்டிசை தாங்கு மருட்செல்வி
புண்டரி கத்தினுள்ளும் பூசனை யாளே.
விளக்கம்:
பாடல்
#1084 இல் உள்ளபடி சாதகர்கள் தரிசித்த வயிரவி தனது நான்கு கைகளிலும்
சிலம்பு வளையல் சங்கு சக்கரம் ஆகியவற்றை ஏந்திக்கொண்டு இருக்கின்றாள். அவள்
இருக்கும் எட்டுத் திசைகளிலும் யோகம் செய்த யோகியர்களுக்கு இறைவியான
பராசக்தியின் உருவமாக அண்டசராசரங்களையும் அதிலிருக்கும் எட்டுத்
திசைகளையும் தாங்கிக் கொண்டு இருக்கும் அருள் வடிவாக அவர்களின்
நெஞ்சத்தாமரைக்குள் வீற்றிருந்து அவர்களின் பூஜையை ஏற்றுக் கொள்பவளாக
இருக்கின்றாள்.
கருத்து:
வயிரவி மந்திரத்தை சாதகம் செய்து 64 கலைகளுக்கான தேவியர்களை சாதகர்கள்
தரிசித்தனர். அதன் பிறகு எட்டு திசைகளிலும் இருக்கும் 64 தேவியர்களுக்கும்
இறைவியான பராசக்தியை யோகம் செய்தால் அவள் அருள் வடிவாக யோகியர்களின்
உள்ளத்திற்குள் வந்து வீற்றிருப்பாள். இவளே யோகியர்கள் செய்கின்ற பூஜையை
ஏற்றுக்கொள்பவளாக இருக்கின்றாள். யோகியர்கள் எப்படி பூஜை செய்ய வேண்டும்
என்பதை அடுத்த பாடலில் அருளுகின்றார்.
Comments
Post a Comment